செய்திகள்

பொத்தேரியில் ரூ.1 கோடி கேட்டு மருத்துவ மாணவர் கடத்தல் வழக்கில் 8 பேர் கைது

Published On 2016-06-19 11:54 IST   |   Update On 2016-06-19 11:54:00 IST
பொத்தேரியில் ரூ.1 கோடி கேட்டு மருத்துவ மாணவர் கடத்தல் வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு:

மதுராந்தகத்தை சேர்ந்தவர் கவுதம்கோத்தாரி. இவரது மகன் பிரகாஷ் கோத்தாரி. பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 2-ந்தேதி மாலை பொத்தேரி பஸ் நிலையத்தில் பிரகாஷ் கோத்தாரி நின்ற போது மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டார். மேலும் அவரது தந்தை கவுதம் கோத்தாரியிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டினர்.

போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதை அறிந்ததும் மறுநாள் (3-ந்தேதி) அதிகாலை கருங்குழி அருகே மாணவர் பிரகாஷ் கோத்தாரியை இறக்கி விட்டு கடத்தல் கும்பல் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கவுதம் கோத்தாரியிடம் லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு பைனான்ஸ் வாங்கி இருந்த சாலவாக்கம் சீத்தனஞ்சேரியை சேர்ந்த லாரி உரிமையாளர் ராஜா கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த கடத்தலில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.

பிரகாஷ் கோத்தாரியிடம் வாங்கிய பைனான்ஸ் தொகையை கட்ட முடியாததால் அவரது மகனையே கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டு உள்ளனர்.

இதையடுத்து ராஜா, வினோத், குமார், குபேந்திரன், அரசு, ஆவடியை சேர்ந்த கிஷோர், பரணிதரன், திவாகர் ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

Similar News