செய்திகள்

சிதம்பரம் அருகே பறக்கும் படையினர் சோதனை: சென்னை வியாபாரிகளிடம் இருந்து ரூ.80 லட்சம் நகைகள் பறிமுதல்

Published On 2016-04-17 07:33 IST   |   Update On 2016-04-17 07:33:00 IST
சிதம்பரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின்போது, சென்னை வியாபாரிகள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.80 லட்சம் மதிப்புள்ள தங்கம்-வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிதம்பரம் :

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று காலை வாகன சோதனை நடத்தினர். அப்போது கடலூர் வழியாக சிதம்பரம் நோக்கி வந்த ஒரு காரை சோதனை நடத்தியபோது, அதில் ஏராளமான தங்க நகைகள் இருந்தன.

விசாரணையில், காரில் இருந்த சென்னை தியாகராயநகரை சேர்ந்த 2 வியாபாரிகள், உரிய ஆவணங்கள் இன்றி 930 கிராம் எடையுள்ள (மதிப்பு ரூ.80 லட்சத்து 24 ஆயிரம்) வைரம் பதித்த தங்க நகைகளை கடலூர், சிதம்பரம், காரைக்கால் பகுதிகளுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்துச்சென்றது தெரியவந்தது.

அனைத்து நகைகளையும், காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை ஒப்படைத்தால், நகைகள் திருப்பி ஒப்படைக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேபோல் சிதம்பரம் அருகே அத்தியாநல்லூரில் நேற்றுமுன்தினம் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், அ.தி.மு.க. தேர்தல் பிரசார பாடல்கள் பதிவு செய்யப்பட்ட ஆயிரத்து 290 சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை லியாட்ஸ் சாலையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சிதம்பரத்துக்கு சி.டி.க்களை கொண்டு சென்றபோது அதிகாரிகளிடம் சிக்கினார். சிறிது நேரத்தில் அவர் உரிய ஆவணங்களை அளித்தபின் சி.டி.க்கள் அனைத்தும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சேலம் பழைய மாநகராட்சி கட்டிடம் அருகில் நேற்று அதிகாலை ஒரு ஆம்னி பஸ்சில் இருந்து 6 பண்டல்கள் இறக்கப்பட்டன. அவற்றை செவ்வாய்பேட்டையை சேர்ந்த மகேந்திரகுமார் என்பவர் தனது வேனில் ஏற்றினார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தேர்தல் கண்காணிப்புக்குழு அதிகாரி வடிவேலு தலைமையிலான குழுவினர் அந்த பண்டல்களை பிரித்து சோதனையிட்டனர்.

அதில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் இருந்தன. ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து வியாபாரத்துக்காக ஆவணம் இன்றி வந்த சிகரெட் பண்டல்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

Similar News