தமிழ்நாடு

தேங்காப்பட்டணத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று நடுக்கடலில் தவித்த 13 மீனவர்கள் மீட்பு

Published On 2023-03-15 09:31 GMT   |   Update On 2023-03-16 03:22 GMT
  • கோவா கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இவர்களது விசைப்படகு திடீரென பழுதானது.
  • மீனவர் குடும்பத்தினர் நடுக்கடலில் தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தினர்.

நாகர்கோவில்:

நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் யோகதாஸ். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 2-ந்தேதி அதே பகுதியைச் சேர்ந்த 13 மீனவர்கள் தேங்காப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

கோவா கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இவர்களது விசைப்படகு திடீரென பழுதானது. இதனால் மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர். மீனவர்களின் படகு பழுதானது குறித்து தூத்தூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மீனவர் குடும்பத்தினர் நடுக்கடலில் தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தினர்.

இந்த நிலையில் நடுக்கடலில் பழுதாகி இருந்த விசைப்படகை அந்த வழியாக மீன்பிடித்துக் கொண்டு கரை திரும்பி வந்த மற்றொரு விசைப்படகு மீனவர்கள் நடுக்கடலில் தவித்த மீனவர்களை மீட்டனர். மீட்கப்பட்ட மீனவர்களை தங்களது படகில் ஏற்றிக்கொண்டு கோவாவுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். நடுக்கடலில் பழுதாகி நின்ற படகையும் கரைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். மீனவர்கள் மீட்கப்பட்ட தகவல் இங்குள்ள அவர்கள் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று அல்லது நாளை மீட்கப்பட்ட மீனவர்கள் கோவா வந்து சேருவார்கள் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News