தமிழ்நாடு

ஜவுளிக்கடை முன்பு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்த காட்சி.

ஜவுளிக்கடையில் 10 ரூபாய் நாணயத்திற்கு டீசர்ட்... அலைமோதிய கூட்டத்தால் பரபரப்பு

Published On 2024-01-04 05:25 GMT   |   Update On 2024-01-04 05:25 GMT
  • வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வசிக்கும் மக்களிடம் ரூ.10 நாணயம் புழக்கத்தில் இல்லாததால் அதனை காண்பது அரிதாகிவிட்டது.
  • சுமார் ஒரு கி.மீ. தொலைவிற்கு நீண்ட வரிசையில் நின்று நாணயங்களை கொடுத்துவிட்டு பொருட்களை வாங்கிச் சென்றனர்.

திருப்பத்தூர்:

வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ரூ.10 நாணயங்கள் செல்லாது என வதந்தி உள்ளது.

இதனால் வியாபாரக்கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ரூ.10 நாணயத்தை வாங்குவதில்லை. இதனால் பொதுமக்களும் அதனை பயன்படுத்துவதில்லை.

தற்போது வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வசிக்கும் மக்களிடம் ரூ.10 நாணயம் புழக்கத்தில் இல்லாததால் அதனை காண்பது அரிதாகிவிட்டது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை சாலையில் உள்ள ஒரு கடையில் கடந்த 3 நாட்களாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரூ.10 நாணயங்கள் 5 வழங்கினால் புதிய டீசர்ட் வழங்கப்படும் என அறிவித்தனர்.

இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டுத்தீப்போல் பரவியது.

இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தாமல் தூக்கி ஒதுக்கி வைத்திருந்த நாணயங்களை அவசர, அவசரமாக சேகரித்து எடுத்துக்கொண்டு அந்த கடையில் குவிந்தனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதியது.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு நீண்ட வரிசையில் நின்று நாணயங்களை கொடுத்துவிட்டு பொருட்களை வாங்கிச் சென்றனர்.

தினமும் 60 நபர்களுக்கு டோக்கன் வழங்கி பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும் நாளை வெள்ளிக்கிழமை வரை மட்டுமே, இந்த விற்பனை செய்யப்படும் என கடை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த சம்பவத்தின்மூலம் பொதுமக்களிடையே 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் வந்துள்ளது.

அனைத்து இடங்களிலும் ரூ.10 நாணயம் புழக்கத்தில் கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News