TNPL: 4 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் த்ரில் வெற்றி
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்தது.
- இது சேப்பாக் அணியின் 6வது வெற்றியாகும்.
நெல்லையில் இன்று நடைபெற்ற டி.என்.பி.எல். தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச முடிவு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களான ஆஷிக் 5 ரன்களிலும், மொகித் ஹரிகரன் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் பாபா அபராஜித் மற்றும் விஜய் சங்கர், அரைசதம் அடித்து அசத்தினர். பாபா அபராஜித் 63 ரன்களிலும், விஜய் சங்கர் 59 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 179 ரன்கள் இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான வசீம் அகமது 10 ரன்களிலும், ஜெயராமன் சுரேஷ்குமார் 63 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஜெகதீசன் கவுசிக் 43 ரன்களிலும், ஜாபர் ஜமால் 6 ரன்களிலும், ராஜ்குமார் 6 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர்.
இறுதியில், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.
சேப்பாக் அணி சார்பில் பிரேம் குமார் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், விஜய் சங்கர், ரோகித் சுதர், சிலம்பரசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இது சேப்பாக் அணியின் 6வது வெற்றியாகும்.