கிரிக்கெட் (Cricket)

டிஎன்பிஎல்: இரண்டு பேர் அரைசதம்- திருச்சிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

Published On 2025-06-23 20:59 IST   |   Update On 2025-06-23 20:59:00 IST
  • பாபா அபராஜித் 40 பந்தில் 63 ரன்கள் விளாசினார்.
  • விஜய் சங்கர் 46 பந்தில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 21ஆவது போட்டி திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இந்த பேட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற திருச்சி கிராண்ட் சோழாஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங் செய்தது. கே. ஆஷிக், மோஹிக் ஹரிகரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆஷிக் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து பாபா அபராஜித் களம் இறங்கினார். மற்றொரு தொடக்க வீரர் ஹரிகரன் 16 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 3ஆவது விக்கெட்டுக்கு பாபா அபராஜித் உடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாபா அபராஜித் அரைசதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 40 பந்தில் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

4ஆவது விக்கெட்டுக்கு விஜய் சங்கர் உடன் ஜெகதீசன் ஜோடி சேர்ந்தார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 17 ஓவரில் 152 ரன்கள் சேர்த்திருந்தது.

18ஆவது ஓவரின் 4ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி 41 பந்தில் அரைசதம் அடித்தார் விஜய் சங்கர். தொடர்ந்து விளையாடிய அவர் 19ஆவது ஓவரில் 46 பந்தில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 19 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 171 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே அடிக்க 20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 178 ரன்கள் எடுத்துள்ளது.

Tags:    

Similar News