கிரிக்கெட் (Cricket)

கெட்ட முட்டை.. இந்திய வீரர்களை மறைமுகமாக சாடிய சாகித் அப்ரிடி

Published On 2025-09-12 19:40 IST   |   Update On 2025-09-12 19:40:00 IST
  • லெஜண்ட்ஸ் லீக் தொடரில் பாகிஸ்தான் எதிராக இந்திய அணி விளையாடாமல் வெளியேறியது.
  • பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடப் போவதில்லை என்று ஷிகர் தவான், ஹர்பஜன் ஆகியோர் அறிவித்தார்கள்.

ஆசியக் கோப்பை 2025 தொடரில் இந்திய அணி வருகிற 14-ந் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. துபாயில் நடைபெற உள்ள அப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக்கூடாது என்று ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடிய லெஜண்ட்ஸ் லீக் தொடர் நடைபெற்றது.

அத்தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடப் போவதில்லை என்று ஷிகர் தவான், ஹர்பஜன் ஆகியோர் இன்ஸ்டாகிராமில் அறிவித்தார்கள்.

அதைத் தொடர்ந்து யுவராஜ் சிங் தலைமையிலான மொத்த இந்திய அணியும் பாகிஸ்தான் எதிராக விளையாடாமல் வெளியேறியது. அதே போல ஆசியக் கோப்பையில் விளையாடக்கூடாது என்று ஹர்பஜன் சிங், கேதார் யாதவ் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் முதன்மையான இந்திய அணியே ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளதாகவும் ஆனால் லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாமல் விலகியவர்கள் தங்களை இந்தியர்கள் என்று நிரூபிக்க முயற்சிப்பதாகவும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

கிரிக்கெட் எப்போதும் நடைபெற வேண்டும் என்று நான் சொல்வேன். ஏனெனில் அதை இரு நாடுகளின் நட்பை வலுப்படுத்த உதவலாம். இங்கிலாந்தில் லெஜெண்ட்ஸ் லீக் போட்டியைப் பார்க்க மக்கள் டிக்கெட் வாங்கினார்கள். வீரர்கள் பயிற்சி எடுத்தனர். ஆனால் கடைசியில் நீங்கள் விளையாடவில்லை.

அதன் பின்னணியில் உள்ள சிந்தனை என்ன? என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதற்கு காரணமாக அமைந்த வீரரின் பெயரைக் குறிப்பிட்டால் அது அவருடைய வாழ்க்கையை கடினமாக்கும். நான் குறிப்பிடும் வீரர் ஒரு மோசமான முட்டை. அவருடைய கேப்டன் நீங்கள் விளையாட விரும்பவில்லையெனில் விளையாடாதீர்கள்.

அதனை சமூக வலைத்தளத்தில் ஏன் பதிவிட வேண்டும் என்று கூறியிருந்தார். சில வீரர்கள் தங்கள் தனிப்பட்ட நோக்கத்துடன் தான் இந்த தொடரில் இருந்து விலகினார்கள். இதனால் தான் அவர்களை நான் கெட்ட முட்டை என்று கூறுகின்றேன். இந்திய அணியில் உள்ள சில இந்திய வீரர்கள் பிறந்ததிலிருந்து நாங்களும் இந்தியர்கள் தான் என்று நிரூபிக்க போராடுகிறார்கள்.

இந்த தொடரில் இருந்து விலகியவர்கள் தற்போது ஆசிய கோப்பை தொடருக்கு கிரிக்கெட் வர்ணனை செய்கிறார்கள். மேலும் இந்தியாவிலும் நிலைமை சரி கிடையாது. சில வீரர்களின் வீடு எரிக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றிருக்கிறது

என்று அப்ரிடி கூறினார்.

Tags:    

Similar News