இங்கிலாந்தில் 'தி ஹன்ட்ரட்' தொடர்: பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிப்பு- ஃபர்ஹான் ஓபன் டாக்
- எந்த அணி எங்களைத் தேர்வு செய்யும் அல்லது செய்யாது என்பது எங்கள் கையில் இல்லை.
- அது குறித்து முடிவெடுப்பது எங்கள் அதிகாரம் அல்ல.
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 'தி ஹன்ட்ரட்' (The Hundred) கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் மார்ச் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்திய ஐபிஎல் (IPL) உரிமையாளர்களுக்குச் சொந்தமான நான்கு அணிகள், பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ், எம்ஐ லண்டன், சதர்ன் பிரேவ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் ஆகிய நான்கு அணிகளும் இந்திய உரிமையாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த அணிகள் பாகிஸ்தான் வீரர்களைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் யார் எங்களைத் தேர்வு செய்வார்கள் என்பது எங்கள் கையில் இல்லை என பாகிஸ்தான் தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எந்த அணி எங்களைத் தேர்வு செய்யும் அல்லது செய்யாது என்பது எங்கள் கையில் இல்லை. அது குறித்து முடிவெடுப்பது எங்கள் அதிகாரம் அல்ல.
எங்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, எங்களை எடுக்க யார் ஆர்வம் காட்டுகிறார்களோ, அந்த லீக்கில் விளையாட நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தி ஹன்ட்ரட் உலகின் மிகச்சிறந்த லீக்குகளில் ஒன்று. ஒவ்வொரு வீரரும் அனைத்து லீக்குகளிலும் விளையாட விரும்புவார்கள். எனவே, நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம்.
2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதேபோல் தென் ஆப்பிரிக்காவின் SA20 மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ILT20 தொடர்களிலும் (ஐபிஎல் உரிமையாளர்கள் உள்ள அணிகள்) பாகிஸ்தான் வீரர்கள் பெரும்பாலும் இடம்பெறுவதில்லை.