விளையாட்டு
கொரோனா பாதிப்பால் குழப்பம் இருந்தாலும் விளையாட்டில் கவனம் செலுத்தினோம்- டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டி
கொரோனா பாதிப்பு காரணமாக 22 ந்தேதி தேதி டெல்லி -ராஜஸ்தான் அணிகள் இடையேயான போட்டி புனேவுக்கு பதிலாக மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
போட்டி நிறைவுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட், தமது அணியில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதால், குழப்பமும் பதட்டமும் இருந்தது என்றார். ஆனால் நாங்கள் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தினோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பஞ்சாப் அணியை 115 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய அற்புதமான பந்துவீச்சுக்குப் பிறகு டேவிட் வார்னர் மற்றும் ப்ரித்வி ஷா அணியை பெரிய வெற்றிக்கு அழைத்துச் சென்றதாகவும், இருவருக்குமே தேவையில்லாத அறிவுரைகளை வழங்க தாம் ஒருபோதும் முயற்சிப்பதில்லை என்றும், பண்ட் குறிப்பிட்டார்.
இதனிடையே, டெல்லி அணியில் உடல்தகுதி நிபுணர்கள், மருத்துவர், சமூக ஊடக உள்ளடக்க குழு உறுப்பினர் மற்றும் வீரர்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், 22 ந்தேதி தேதி டெல்லி -ராஜஸ்தான் அணிகள் இடையேயான போட்டி புனேவுக்கு பதிலாக மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.