விளையாட்டு
3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது
3வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி சதமடித்தார்
லாகூர்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், தலா ஒரு போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற்று இருந்தன.
இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், பந்துவீச்சை தேர்வுசெய்தார்.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் உள்பட தொடக்க வீரர்கள் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 67 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது அதிகபட்சமாக ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் கேரி 56 ரன்கள் அடித்தார்.41.5 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது .
இதனை தொடர்ந்து 211 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 37.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி 105 ரன்கள் குறித்தார். இமாம் உல் ஹக் 87 ரன்கள் எடுத்தார். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.