விளையாட்டு
விராட் கோலி

100-வது டெஸ்டில் விராட் கோலி ஏமாற்றம்: 45 ரன்னில் ஆட்டமிழந்தார்

Published On 2022-03-04 09:27 GMT   |   Update On 2022-03-04 09:27 GMT
மொகாலியில் நடைபெற்று வரும் இலங்கை எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் விராட் கோலி 45 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானார்.
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் ஹனுமா விஹாரி, ஷ்ரேயாஸ் அய்யர் இடம் பிடித்திருந்தனர். டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி மயங்க் அகர்வால்- ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அணியின் ஸ்கோர் 9.5 ஓவரில் 52 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 28 பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஹனுமா விஹாரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் மயங்க் அகர்வால் 33 ரன்னில் வெளியேறினார். அப்போது இந்தியா 2 விக்கெட் இழப்பிற்று 180 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது விக்கெட்டுக்கு ஹனுமா விஹாரி உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். விராட் கோலிக்கு இது 100-வது டெஸ்ட் ஆகும். 100-வது டெஸ்டில் சதம் விளாசி, 2019-ம் ஆண்டில் இருந்து சதமடிக்காத வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 76 பந்துகளை சந்தித்து 45 ரன்கள் எடுத்து க்ளீன் போல்டானார். இதன்மூலம் 100-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் அரைசதம் கூட அடிக்காமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். அரைசதம் அடித்த ஹனுமா விஹாரி 58 ரன்னில் வெளியேறினார்.

தற்போது இந்தியா 57 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரிஷாப் பண்ட் 17 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் அய்யர் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News