செய்திகள்
இந்திய வீரர்கள்

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு -டோனிக்கு முக்கிய பொறுப்பு

Published On 2021-09-08 16:21 GMT   |   Update On 2021-09-08 16:21 GMT
டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணியில், ஷிகர் தவான், யுஸ்வேந்திர சாகல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
புதுடெல்லி:

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் (குரூப்-2), இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா (குரூப்-1) ஆகிய 8 நாடுகள் நேரடியாக 2-வது சுற்றில் இருந்து விளையாடும். இலங்கை, வங்காள தேசம், அயர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகள் தகுதி சுற்றில் விளையாடும். இதில் இருந்து 4 அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறும். 

இந்த போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட பட்டியலை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். அணியில், ஷிகர் தவான், யுஸ்வேந்திர சாகல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அணியின் வழிகாட்டியாக முன்னாள் கேப்டன் டோனி நியமிக்கப்பட்டுள்ளார்.



அணியில் இடம்பெற்ற வீரர்கள்: 

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாகர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி.

இவர்கள் தவிர மாற்று வீரர்களாக ஸ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாகூர், தீபக் சாகர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இரு அணிகளும் அக்டோபர் 24-ந் தேதி மோதுகின்றன. நியூசிலாந்துடன் 31-ந் தேதியும், ஆப்கானிஸ்தானுடன் நவம்பர் 3-ந் தேதியும், தகுதி சுற்று அணிகளுடன் நவம்பர் 5 மற்றும் 8-ந் தேதிகளிலும் இந்திய அணி மோதுகிறது.
Tags:    

Similar News