செய்திகள்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்- செக் குடியரசு வீராங்கனை பார்போரா சாம்பியன்
உலக தரவரிசையில் 33வது இடத்தில் உள்ள பார்போரா டென்னிஸ் போட்டிகளில் இதுவரை இரண்டு சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.
பாரிஸ்:
பாரிசில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், செக் குடியரசின் பார்போரா கிரெஜிகோவா, ரஷியாவின் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 6-1, 2-6, 6-4 என்ற செட்கணக்கில் பார்போரா வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் 40 ஆண்டுகளுக்கு பிறகு பிரெஞ்சு ஓபனை வென்ற முதல் செக் குடியரசு வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு 1981ல் ஹனா மாண்ட்லிகோவா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
உலக தரவரிசையில் 33வது இடத்தில் உள்ள பார்போரா (வயது 25), டென்னிஸ் போட்டிகளில் இதுவரை இரண்டு சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.