செய்திகள்
விராட்கோலி

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்

Published On 2021-06-04 06:46 GMT   |   Update On 2021-06-04 06:46 GMT
லண்டன் சென்றடைந்த இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் அங்கிருந்து சவுத்தம்டனுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு மைதான வளாகத்தில் உள்ள ஓட்டலில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சவுத்தம்டன்:

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் மோதுகிறது. அதன்பின் இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

அதேபோல் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியும் இங்கிலாந்து சென்று டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பாக மும்பையில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இரண்டு வார தனிமைப்படுத்துதல் முடிவடைந்ததையடுத்து இந்திய வீரர்கள், வீராங்கனைகள் நேற்று முன்தினம் நள்ளிரவு மும்பையில் இருந்து தனி விமானத்தில் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றனர்.

லண்டன் சென்றடைந்த இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் அங்கிருந்து சவுத்தம்டனுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு மைதான வளாகத்தில் உள்ள ஓட்டலில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


வீரர்கள், வீராங்கனைகள் ஓட்டலில் 10 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்களின் தனிமைப்படுத்துதல் காலம் தொடங்கி உள்ளது.

இதையடுத்து இந்திய அணியினர் ஓட்டலில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். தனிமைப்படுத்துதல் முடிந்த பிறகு பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

இந்திய ஆண்கள் அணி வருகிற 18-ந் தேதி சவுத்தம்டனில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. பெண்கள் அணி 16-ந் தேதி பிரிஸ்டலில் தொடங்கும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பெண்கள் அணியுடன் மோதுகிறது.

Tags:    

Similar News