ஏலம் முடிந்த பிறகே முடிவு - ஐ.பி.எல். மாற்று இடமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நீடிப்பு
புதுடெல்லி:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. வருடந்தோறும் இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்பட்டு வந்தது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜாவில் செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடைபெற்றது.
இந்த ஆண்டுக்கான 14-வது ஐ.பி.எல். போட்டி இந்தியாவில்தான் நடத்தப்படும் என்று கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 18-ந் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் போட்டி நடைபெறும் இடத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்னும் முடிவு செய்யவில்லை. ஐ.பி.எல். ஏலம் முடிந்தபிறகுதான் போட்டி நடைபெறும் இடத்தை முடிவு செய்யப்படும் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக மாற்று இடமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக கட்டுக்குள் வராததால், இந்த ஆண்டும் ஐ.பி.எல். போட்டி இந்தியாவில் நடைபெறுமா? என்று உறுதியாக தெரியவில்லை.