செய்திகள்
சையத் முஷ்டாக் அலி டிராபி: மீண்டும் ஒரு முறை கேரளா அபார வெற்றி
மும்பை அணிக்கெதிராக 197 இலக்கை வெற்றிகரமாக எட்டிய கேரளா, இன்றைய ஆட்டத்தில் டெல்லிக்கு எதிராக 213 இலக்கை சூப்பராக சேஸிங் செய்தது.
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் டெல்லி - கேரளா அணிகள் மோதின. முதலில் விளையாடிய டெல்லி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. தவான் அதிகபட்சமாக 48 பந்தில் 77 ரன்களும், லலித் யாதவ் ஆட்டமிழக்காமல் 25 பந்தில் 52 ரன்களும் விளாசினர்.
பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கேரளா அணி களம் இறங்கியது. கடந்த போட்டியில் சதம் அடித்த முகமது அசாருதீன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் ரபின் உத்தப்பா 54 பந்தில் 91 ரன்கள் விளாசினார். விஷ்னு வினோத் 38 பந்தில் 71 ரன்கள் விளாச கேரளா 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கேரளா முந்தைய போட்டியில் மும்பை அணிக்கெதிராக 197 ரன் இலக்கை எளிதாக சேஸிங் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.