செய்திகள்
ஜோ ரூட் அபாரம்: 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 320/4- 185 ரன்கள் முன்னிலை
காலேயில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் ஜோ ரூட் அபாரமாக விளையாடி 168 ரன்கள் விளாச இங்கிலாந்து 185 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 135 ரன்னில் சுருண்டது.
பின்னர் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 41 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. பேர்ஸ்டோவ் 47 ரன்களுடனும், ஜோ ரூட் 66 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட், பேர்ஸ்டோவ் ஆட்டத்தை தொடர்ந்தனர். பேர்ஸ்டோவ் நேற்றைய 47 ரன்னிலேயே வெளியேறினார்.
அடுத்து வந்த ஜோ ரூட் உடன் அறிமுக வீரர் டான் லாரன்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜோ ரூட் 163 பந்தில் சதம் அடித்தார். மறுமுனையில் 95 பந்தில் அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து விளையாடிய டான் லாரன்ஸ் 73 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் ஜோ ரூட் இரட்டை சதம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இங்கிலாந்து அணி 94 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அத்துடன் 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜோ ரூட் 168 ரன்களுடனும், ஜோஸ் பட்டர் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை இங்கிலாந்து 185 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.