செய்திகள்
ஜாப்ரா ஆர்சர்

உயிர்-பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறியதால் 2-வது டெஸ்டில் இருந்து ஆர்சர் அதிரடி நீக்கம்

Published On 2020-07-16 10:07 GMT   |   Update On 2020-07-16 10:07 GMT
இங்கிலாந்து வீரர்களுக்கான உயிர்-பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறியதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் இருந்து ஆர்சர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்தாகவே வீரர்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் வகையில் இங்கிலாந்து உயிர்-பாதுகாப்பு வளையம் என்ற பாதுகாப்பை ஏற்படுத்தியது. இதற்கான தனி நெறிமுறைகளை வகுத்துள்ளது. இந்த நெறிமுறைகளை வீரர்கள் கடைபிடிக்காவிடில் தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்த பின்னர்தான் அணியுடன் இணைய அனுமதிக்கப்படுவார்கள்.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. 2-வது டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டரில் தொடங்குகிறது. சவுத்தாம்ப்டனில் இருந்து மான்செஸ்டருக்கு வரும் வழியில் ஜாஃப்ரா ஆர்சர் பிரைட்டனில் உள்ள வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது.

இதனால் அவர் உடனடியாக ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் 2-வது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த ஐந்து நாட்களில் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. அதன்பின்தான் அணியுடன் இணைவார்.

என்னுடைய செயலுக்காக மிகவும் வருந்துகிறேன் என ஆர்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜாஃப்ரா ஆர்சர் கூறுகையில் ‘‘நான் செய்த செயலுக்காக மிகவும் வருந்துகிறேன். எனக்கு மட்டுமல்ல அணி வீரர்கள் மற்றும் நிர்வாகத்திற்கே ஆபத்தை விளைவித்து விடும். எனக்கு எதிரான நடவடிக்கையை முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறேன். உயிர்-பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் ஒவ்வொருவரிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். 

டெஸ்ட் போட்டியில் இடம் பிடிக்காமல் போனது மிகுந்த வேதனை அளிக்கிறது. குறிப்பாக தொடரை நிர்ணயிக்கும் டெஸ்டில் பங்கேற்க முடியவில்லை’’ என்றார்.
Tags:    

Similar News