செய்திகள்
ஒருங்கிணைந்த அணிக்கு மோகன் பகானின் சீருடையை பயன்படுத்த முடிவு
ஒருங்கிணைந்த அணிக்கு மோகன் பகானின் சீருடையை பயன்படுத்த நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கொல்கத்தா:
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியின் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா (ஏ.டி.கே.) அணியும், நூற்றாண்டு கால பழமைவாய்ந்த மோகன் பகான் கிளப்பும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இணைந்தது. இந்த சீசனில் ஒருங்கிணைந்த அணியாக ஐ.எஸ்.எல். போட்டியில் களம் இறங்குகிறது.
இதையொட்டி நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஏ.டி.கே. மோகன் பகான் என்ற பெயரில் போட்டியில் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது. அத்துடன் பெரும்பாலானவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மோகன் பகானின் அணியின் அடையாளமான பச்சை மற்றும் அடர் சிவப்பு நிறம் கலந்த சீருடையையே ஒருங்கிணைந்த அணிக்கு பயன்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
புதிய அணிக்குரிய லோகோவில் மோகன் பகானின் சின்னமான ‘படகு’ இடம் பெற்றுள்ளது. திறமையான உள்ளூர் வீரர்களுக்கு உதவுவதற்காக மேற்கு வங்காளத்தில் உலகத்தரம் வாய்ந்த கால்பந்து அகாடமி அமைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் ஒருங்கிணைந்த கிளப் கூறியுள்ளது.