செய்திகள்
ஷசாங்க் மனோகர் இந்தியாவுக்கு எதிரானவர்: என். ஸ்ரீனிவாசன் கடும் தாக்கு
ஐசிசி-யின் தலைவர் ஷசாங்க் மனோகர் பதவி விலகியதால் பிசிசிஐ மிக்க மகிழ்ச்சி அடையும் என பிசிசிஐ முன்னாள் தலைவர் என். ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த ஷசாங்க் மனோகர் கடந்த நான்கரை ஆண்டுகளாக ஐசிசி தலைவராக இருந்தார். நேற்று பதவியில் இருந்து விலகினார். இவர் இருந்த காலத்தில் பிசிசிஐ-யின் முக்கியத்துவத்தை குறைத்தார். இதை பிசிசிஐ அதிகாரிகள் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஷசாங்க் மனோகர் விலகியது பிசிசிஐ-க்கு மகிழ்ச்சி அளிக்கும் என்று பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் என் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து என் ஸ்ரீனிவாசன் கூறுகையில் ‘‘என்னுடைய தனிப்பட்ட பார்வையில், இந்திய கிரிக்கெட்டை மிகப்பெரிய அளவில் காயப்படுத்திவிட்டார். அவர் விலகியதால் இந்திய கிரிக்கெட்டில் உள்ள ஒவ்வொரு நபரும் மகிழ்ச்சி அடைவார்கள்.
ஷசாங்க் மனோகர் கிரிக்கெட்டில் இந்தியாவின் நிதி ஆதாரத்திற்கும், ஐசிசி பதவிக்கும் தடையாக இருந்தார். அவர் இந்தியாவுக்கு எதிரானவர். உலக கிரிக்கெட்டில் இந்தியாவின் முக்கியத்துவத்தை குறைத்தார். தற்போது அவர் வெளியேறிவிட்டார். ஏனென்றால், இந்திய தலைவர்களிடம் இருந்து எந்த ஆதரவையும் பெற முடியாது என்பது அவருக்கும் தெரியும்’’ என்றார்.