செய்திகள்
குமார் சங்ககரா

2011 உலக கோப்பை மேட்ச் பிக்சிங் விவகாரம்: டி சில்வா, உபுல் தரங்கா, சங்ககராவிடம் போலீஸ் விசாரணை

Published On 2020-07-01 12:05 GMT   |   Update On 2020-07-01 12:05 GMT
2011-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் மேட்ச் பிக்சிங் நடைபெற்றதாக எழுந்த விவகாரத்தில் மூன்று பேரிடம் போலீசாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
டோனி தலைமையில் இந்திய அணி 2011-ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றியது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த உலகக்கோப்பை கிடைத்தது. இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இருந்தது.

இந்த நிலையில் 2011-ம் ஆண்டு மும்பையில் நடந்த உலக கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்சிங் எனும் சூதாட்டம் நடந்ததாக இலங்கை முன்னாள் விளையாட்டு மந்திரி அலுத்காமகே சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

இறுதிப் போட்டியை இலங்கை விற்று விட்டதாகவும், வீரர்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்றும், சில குழுக்கள் இதில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த சூதாட்ட குற்றச்சாட்டை அப்போதைய கேப்டன் சங்ககரா மற்றும் ஜெயவர்த்தனே நிராகரித்து இருந்தனர். இது அபத்தமானது. இதற்கான ஆதாரத்தை கொடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

இந்தக் சூதாட்ட புகார் தொடர்பாக இலங்கை விளையாட்டு அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் 2011 உலக கோப்பை இறுதி போட்டியில்  கூறப்படும் சூதாட்ட குற்றச்சாட்டு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

போலீசார் விசாரைணயை தொடங்கியுள்ளனர். அப்போதைய காலக்கட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த அரவிந்த டி சில்வா மற்றும் தொடக்க பேட்ஸ்மேன் உபுல் தரங்கா ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது கேப்டனாக இருந்த சங்ககராவிடம் அறிக்கை அளிக்கும்படி போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9 மணிக்கு போலீஸ் முன் ஆஜராகி விளக்கம் அளிப்பார் எனத் தெரிகிறது.
Tags:    

Similar News