செய்திகள்
பிசிசிஐ

விசா குறித்து எழுத்துபூர்வமாக உத்தரவாதம் கேட்பதா?- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இந்தியா பதிலடி

Published On 2020-06-26 02:40 GMT   |   Update On 2020-06-26 02:40 GMT
இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க விசா பிரச்சனை எதுவும் இருக்காது என்று எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்த நிபந்தனைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பதிலடி கொடுத்துள்ளது.
புதுடெல்லி:

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2021-ம் ஆண்டிலும், ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-ம் ஆண்டிலும் இந்தியாவில் நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் ‘யூடியூப்’ சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியாவில் நடைபெற இருக்கும் இரண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி பங்கேற்க விசா பெறுவதில் எந்தவித பிரச்சனையும் இருக்காது என்று இந்திய அரசிடம் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் எழுத்துபூர்வமான உத்தரவாதத்தை பெற்று தர வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) நாங்கள் கேட்டு இருக்கிறோம்.

ஏனெனில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் நடந்த உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க 2 பாகிஸ்தானியர்களுக்கு இந்திய அரசு அனுமதி மறுத்து இருந்தது’ என்று தெரிவித்து இருந்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த நிபந்தனைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சுடச்சுட பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில் ‘கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அரசின் தலையீடு எதுவும் இருக்கக்கூடாது என்று ஐ.சி.சி. விதிமுறையில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இந்த விதிமுறை கிரிக்கெட் வாரியங்களுக்கும் பொருந்தும். எனவே கிரிக்கெட் வாரியங்கள் அரசின் நடவடிக்கைகளில் தலையிட முடியாது. ஐ.சி.சி.யில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நலனுக்கு எதிராக செயல்படும் தனிப்பட்ட சிலரின் ஏஜெண்டாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செயல்படுவதை உணர்ந்து கொள்வதுடன், அதனை நிறுத்தி கொள்வதற்கும் இது சரியான தருணமாகும்.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் சட்டத்துக்கு புறம்பான ஊடுருவல் எதுவும் இருக்காது என்றோ அல்லது போர் நிறுத்த மீறல் எதுவும் நடக்காது என்றோ? அல்லது பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்திய மண்ணில் எந்தவித பயங்கரவாத செயலும் அரங்கேற்றப்படாது என்றோ? அல்லது புல்வாமா போன்ற தாக்குதல் மீண்டும் நடைபெறாது என்றோ பாகிஸ்தான் அரசிடம் இருந்து எழுத்துபூர்வமாக உத்தரவாதம் பெற்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கொடுக்குமா?’ என்றார்.

எல்லையில் நிலவும் பிரச்சனை காரணமாக இந்தியா, பாகிஸ்தான் அரசுகள் இடையே சுமூக உறவு இல்லை என்பதால் 2012-ம் ஆண்டுக்கு பிறகு இருநாட்டு அணிகள் இடையே நேரடி கிரிக்கெட் போட்டி தொடர் எதுவும் நடைபெறவில்லை. ஐ.சி.சி. போட்டிகளில் மட்டும் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News