செய்திகள்
பிளாக் லிவ்ஸ் மேட்டர்- பிரிமியர் லீக் போட்டி தொடங்கும் முன் மண்டியிட்டு ஆதரவு தெரிவித்த வீரர்கள்
பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்ற வீரர்கள் போட்டி தொடங்குவதற்கு முன்பு மண்டியிட்டு இனவெறிக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
லண்டன்:
நேற்றைய முதல் போட்டியில் ஆஸ்டன் வில்லா-ஷெபீல்டு யுனைடெட் அணிகள் மோதின. போட்டியை தொடங்குவதற்கு முன்பாக, நடுவர், வீரர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவரும் 10 வினாடிகள் மண்டியிட்டு, பிளாக் லிவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அதன்பின்னர் மான்செஸ்டர் சிட்டி, அர்சனல் அணிகளுக்கிடையிலான போட்டி தொடங்கும்போதும், வீரர்கள் மண்டியிட்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில் கடந்த மே மாதம் வெள்ளையின காவல்துறை அதிகாரியால் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் (46) கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து அந்நாடு முழுக்க இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஜார்ஜ் பிளாய்டின் மரணத்தைத் தொடர்ந்து பிளாக் லிவ்ஸ் மேட்டர் என்னும் இயக்கமாக மாறி உலக அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிரிட்டனிலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், பிரிட்டனில் கொரோனா அச்சம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நேற்று மீண்டும் தொடங்கியது. இப்போட்டியின்போது வீரர்கள் அனைவரும் மண்டியிட்டு, பிளாக் லிவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அத்துடன் அனைவரும் பிளாக் லிவ்ஸ் மேட்டர் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டிஷர்ட்டுகளை அணிந்திருந்தனர்.