செய்திகள்
வாசிம் ஜாபர்

துலீப், தியோதர் கோப்பை கிரிக்கெட் தொடர்களை ரத்து செய்ய வேண்டும்: வாசிம் ஜாபர்

Published On 2020-06-16 09:23 GMT   |   Update On 2020-06-16 09:23 GMT
இந்த சீசனுக்கான துலீப், தியோதர் கோப்பை கிரிக்கெட் தொடர்களை ரத்து செய்ய வேண்டும் என்று வாசிம் ஜாபர் வலியுறுத்தி உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ரஞ்சி போட்டியில் அதிக ரன்கள் குவித்தவருமான வாசிம் ஜாபர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

இந்த சீசன் எப்பொழுது தொடங்கினாலும் முதல் போட்டியாக ஐ.பி.எல்.-லை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சிக்கும். ஐ.பி.எல். போட்டி முடிந்ததும் இரானி கோப்பை போட்டியுடன் உள்ளூர் சீசனை தொடங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முனைப்பு காட்டும்.

அதனை அடுத்து ரஞ்சி கோப்பை மற்றும் சையத் முஸ்தாக் அலி போட்டிகள் நடத்தப்பட வேண்டும். கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த சீசனுக்கான விஜய் ஹசாரே, துலீப், தியோதர் கோப்பை போட்டிகளை ரத்து செய்ய வேண்டும். 

இந்த போட்டிகளை ரத்து செய்வதன் மூலம் மற்ற போட்டிகளை முழுமையாக நடத்த முடிவதுடன், வீரர்களுக்கும் போட்டிக்கு தயாராக போதிய இடைவெளி கிடைக்கும். மாறாக எல்லா போட்டிளையும் நடத்த முயற்சித்தால் வீரர்களுக்கு போதிய ஓய்வு கிடைப்பது கடினமாகி விடும்.

இதேபோல் ஜூனியர் பிரிவில் இந்த சீசனில் 23 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒருநாள் போட்டிகளை நீக்க முயற்சிக்க வேண்டும். ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறுவதற்கான வழிமுறை கடினமானதாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ரஞ்சி போட்டியில் ‘டி’ பிரிவில் முதலிடம் பெறும் அணிக்கு கால்இறுதியில் விளையாட வாய்ப்பு வழங்கக்கூடாது. அப்படி வழங்குவது போட்டியை சற்று பலவீனப்படுத்தும்.

இவ்வாறு வாசிம் ஜாபர் கூறினார்.
Tags:    

Similar News