செய்திகள்
சுனில் கவாஸ்கர்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை இலங்கையில் நடத்தலாம்: கவாஸ்கர் யோசனை

Published On 2020-06-14 08:29 GMT   |   Update On 2020-06-14 08:29 GMT
ஐபிஎல் 2020 சீசனை நடத்த ஆயத்தமாகி வருகிறோம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ள நிலையில், இலங்கையில் நடத்தலாம் என கவாஸ்கர் யோசனை வழங்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘‘கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் குறைந்தது அக்டோபர் மாதம்வரை இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை தொடங்குவது பாதுகாப்பானதாக இருக்காது.

மருத்துவ பாதுகாப்பு அம்சங்களுடன் அடுத்த மாதம் நடக்கும் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டெஸ்ட் தொடர், கிரிக்கெட் போட்டியை மீண்டும் தொடங்கலாமா? இல்லையா? என்பதை மதிப்பிடுவதற்கு உதவிகரமாக இருக்கும்.

ஸ்டேடியத்திற்குள் குறைந்த அளவு ரசிகர்களை அனுமதிக்கலாம் என்ற ஆஸ்திரேலிய அரசின் அறிவிப்பை தொடர்ந்து அங்கு 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடக்கக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடந்தால் அதன் பிறகு அக்டோபரில் ஐ.பி.எல். 20 ஓவர் போட்டித் தொடரை நடத்துவது கடினமாகி விடும்.

எனவே செப்டம்பர் மாதத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்தலாம். அது பருவமழை காலம் என்பதால் அந்த சமயத்தில் இந்தியாவில் இந்த போட்டியை வைக்க முடியாது. அதற்கு பதிலாக செப்டம்பர் மாத தொடக்கத்தில் இலங்கையில் ஐ.பி.எல். போட்டியை நடத்தலாம். ஒவ்வொரு அணியும் இரண்டு முறை மோதுவதற்கு பதிலாக தலா ஒரு தடவை மட்டும் மோதும் வகையில் போட்டி அட்டவணையை சுருக்க வேண்டும்.

இந்த வகையில் மட்டுமே இந்த ஆண்டில் ஐ.பி.எல். போட்டியை நடத்த சாத்தியம் உள்ளது. இலங்கை இல்லாவிட்டால் ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடத்தலாம்’’என்றார்.
Tags:    

Similar News