செய்திகள்
ராபின் உத்தப்பா

உலக கோப்பையில் விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது: ராபின் உத்தப்பா

Published On 2020-04-07 16:54 IST   |   Update On 2020-04-07 16:54:00 IST
ஐந்து வருடங்களாக இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் இருந்தாலும், உலக கோப்பையில் விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2006-ம் ஆண்டு அதிரடி பேட்ஸ்மேனாக களம் இறங்கியவர் ராபின் உத்தப்பா. 34 வயதாகும் உத்தப்பா தனது 20 வயதிலேயே இந்திய அணியில் அறிமுகம் ஆனாலும் தொடர்ந்து அவரால் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. அவ்வப்போது இடைவெளி விட்டுவிட்டு அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் கடைசியாக 2015 ஜூலை 19-ந்தேதிக்குப்பின் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை.

இருந்தாலும் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘தற்போது வரை நான் போட்டிக்குரிய நபராக இருக்க விரும்புகிறேன். இந்த எண்ணம் எனது மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கிறது. போட்டிக்குரிய நபராக இருந்து சிறப்பாக விளையாடுவேன். உண்மையிலேயே இன்னும் எனக்கு உலக கோப்பை இருப்பதாக நம்புகிறேன். குறிப்பாக டி20 வடிவிலான கிரிக்கெட்டில் இருக்கிறது’’ என்றார்.

2007-ம் ஆண்டு எம்எஸ் டோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும்போது அணியில் இடம் பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்காக 46 ஒருநாள் போட்டிகளிலும், 13 டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

Similar News