செய்திகள்
கொரோனாவுக்காக அரைமாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் வங்காளதேசம் கிரிக்கெட் வீரர்கள் முடிவு
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்து வகையில் அரசுக்கு அரைமாத சம்பளத்தை வழங்க இருப்பதாக வங்காளதேசம் கிரிக்கெட் வீரர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கொரோனா வைரசுக்கு 39 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்துபேர் உயிரிழந்துள்ளனர். கொடிய வைரஸ் நோயான கொரோனாவை தடுக்க வங்காளதேசம் அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்கிடையே அரசுக்கு உதவும் வகையில் நன்கொடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் வங்காளதேசம் கிரிக்கெட் வீரர்கள் தங்களின் அரைமாத சம்பளத்தை நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளனர். வங்களாதேச கிரிக்கெட் போர்டின் ஒப்பந்தத்தில் உள்ள 17 வீரர்கள் உள்பட 27 வீரர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். மற்ற 10 வீரர்கள் தேசிய அணிக்காக விளையாடக்கூடியவர்கள்.
‘‘கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் போராடிக் கொண்டிருக்கிறது. வங்காளதேசத்தில் கொரோனா மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது. நாங்கள் மக்களிடம் இந்த தொற்றை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுங்கள் என்று தெரிவிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
நாங்கள் கொடுக்கும் தொகை ஒட்டுமொத்தமாக இது 25 லட்சம் டாக்காவாக இருக்கும். கொரோனா வைரஸ்க்கு ஏதிரான போராட்டத்தில் இது குறைவானதாக இருக்கலாம். எங்களுடைய சொந்த நிலையில் இருந்து ஒன்றிணைந்து வழங்க முடியும் என்றால் இது மிகப்பெரிய நடவடிக்கையாக இருக்கும்’’ என கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.