கொரோனா வைரஸ் ஐ.பி.எல். போட்டி தள்ளி வைக்கப்படலாம்- மராட்டிய மந்திரி சொல்கிறார்
மும்பை:
13-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 29-ந்தேதி தொடங்குகிறது. மே 24-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
கொரோனா வைரஸ் காரணமாக ஐ.பி.எல். போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. உயிர்கொல்லியான இந்த வைரஸ் காரணமாக ஏற்கனவே உலகம் முழுவதும் பல்வேறு போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்படுவதுமாக இருந்து வருகிறது. ஆனால் ஐ.பி.எல். போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி தெரிவித்தார்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஐ.பி.எல். போட்டி தள்ளிவைக்கப்படலாம் என்று மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபெ தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் போட்டிகளை பார்க்க ஓரு இடத்தில் அதிகமான மக்கள் கூடுவார்கள். இதன் காரணமாக கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டி தள்ளி வைக்கப்படலாம்.
இதன் காரணமாக ஐ.பி.எல் போட்டியை தள்ளி வைப்பது தொடர்பாக போட்டி அமைப்பாளர்கள் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போட்டியை தள்ளி வைப்பது தொடர்பாக விரைவில் முடிவு அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. இதுவரை 3,600 பேர் பலியாகி உள்ளனர்.