செய்திகள்
வெற்றியை கொண்டாடும் நியூசிலாந்து வீரர்கள்

டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலும் இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது நியூசிலாந்து

Published On 2020-03-02 03:20 GMT   |   Update On 2020-03-02 03:20 GMT
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டித் தொடரிலும் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆகி தொடரை இழந்துள்ளது.
கிறிஸ்ட்சர்ச்:

நியூசிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 242 ரன்களும், நியூசிலாந்து 235 ரன்களும் எடுத்தன. 

இதனையடுத்து 7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி மீண்டும் பேட்டிங்கில் சொதப்பியது. தொடக்க ஆட்டக்காரர்கள் நிலைத்து நின்று ஆடத் தவறினர். முக்கிய ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 90 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 3ம் நாளான இன்று தொடர்ந்து ஆடிய இந்திய அணி, விரைவில் மீதமுள்ள விக்கெட்டுகளை இழந்து, 124 ரன்களில் சுருண்டது. இந்த இன்னிங்சில் புஜாரா 24 ரன்கள் எடுத்ததே, அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.



இதையடுத்து 132 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றியை எட்டியது. துவக்க வீரர்கள் லாதம் 52 ரன்களும், புளுண்டேல் 55 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து, டெஸ்ட் போட்டித் தொடரை 2-0 என வென்றுள்ளது. கைல் ஜேமீசன் ஆட்டநாயகனாகவும், டிம் சவுத்தி தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் போட்டித் தொடரில் 0-5 என ஒயிட் வாஷ் ஆனது. அதனைத் தொடர்ந்து டெஸ்ட் தொடரிலும் ஒயிட் வாஷ் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News