செய்திகள்
நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டீட்

இந்திய அணி குறைந்த ரன்னில் சரண் அடைந்தது ஆச்சரியம் அளித்தது: கேரி ஸ்டீட்

Published On 2020-02-26 08:04 GMT   |   Update On 2020-02-26 08:04 GMT
வெலிங்டன் டெஸ்டில் இந்திய அணி குறைந்த ரன்னில் சரண் அடைந்தது ஆச்சரியம் அளிக்கிறது என்று நியூசிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாங்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இடைவிடாது நீண்ட நேரம் நெருக்கடி கொடுத்ததே குறைந்த ரன்னில் ஆல்அவுட் ஆக காரணம். உள்ளூர் சூழலில் டிம் சவுதி, டிரென்ட் போல்ட் ஆகியோரின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது.

குறிப்பாக 8 வார ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் களம் திரும்பிய போல்டின் பந்து வீச்சில் ‘பொறி’ பறந்தது. உலகின் வேறு எந்த இடத்தையும் விட நியூசிலாந்தில் விளையாடுவதுதான் கடினம் என்பதை எல்லா அணிகளும் நினைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதுதான் எங்களுக்கு பெருமையாகும்.

அடுத்த டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தரம் வாய்ந்த வீரர்களை கொண்டுள்ள இந்திய அணி பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும். இதுதான் எங்களது பந்து வீச்சாளர்களுக்கு சவாலான விஷயமாக இருக்கும்.

குழந்தை பிறந்ததால் முதலாவது டெஸ்டில் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் அணிக்கு திரும்பும்போது, யாரை சேர்ப்பது, யாரை நீக்குவது என்ற தர்ம சங்கடம் ஏற்படும். நீல் வாக்னர் வரும்போது நிச்சயம் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார். அதே சமயம் அறிமுக வீரராக இறங்கிய கைல் ஜாமிசனும் முதலாவது டெஸ்டில் பிரமாதப்படுத்தி விட்டார்.

எனவே 2-வது டெஸ்டில் பிரதான சுழற்பந்து வீச்சாளர் இன்றி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இறங்குவது குறித்து பரிசீலிப்போம். இவ்வாறு கேரி ஸ்டீட் கூறினார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 29-ந்தேதி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது.
Tags:    

Similar News