செய்திகள்
விராட் கோலி - சஞ்சய் மஞ்சுரேக்கர்

கோலி சொதப்பியதே தோல்விக்கு காரணம் - சஞ்சய் மஞ்சுரேக்கர் பாய்ச்சல்

Published On 2020-02-25 05:01 GMT   |   Update On 2020-02-25 05:01 GMT
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் விராட் கோலி சொதப்பியதே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார்.
வெலிங்டன்:

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டன்னில் நடந்தது. இதில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

இந்த தோல்விக்கு இந்திய வீரர்களின் பேட்டிங்கே காரணமாக அமைந்தது. மயங் அகர்வால், ரகானேவைத் தவிர மற்ற வீரர்கள் பொறுப்புடன் விளையாடவில்லை. இதனால் மோசமான தோல்வியை இந்தியா சந்தித்தது.

இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தோற்றதற்கு இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் சொதப்பியதே முக்கிய காரணம் என்று இந்திய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் கேப்டன் விராட் கோலி இரு இன்னிங்ஸ்சிலும் விரைவில் அவுட் ஆனதே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. கோலி ரன்களை குவித்து இருந்தால், அது எதிரணியால் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் போயிருக்கும். நியூசிலாந்து அணி வீரர்கள் தங்களது திட்டங்களை செயல்படுத்த முடியாமல் திணறி இருப்பார்கள்.

ஆனால் யாரும் எதிர் தாக்குதல் நடத்தி போராடவில்லை. இந்த காரணங்களால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இவ்வாறு அவர் கூறினார். கோலி முதல்-இன்னிங்சில் 2 ரன்னிலும் இரண்டாவது இன்னிங்சில் 19 ரன்னிலும் அவுட் ஆனார்.

நேற்று போட்டி முடிந்த பிறகு கோலி கூறும்போது, நான் நல்ல நிலையில் இருக்கிறேன். எனது பேட்டிங் நன்றாக இருக்கிறது. ரன் குவிக்காததால் எனது பேட்டிங் திறன் பாதிக்கப்படவில்லை. சில சமயங்களில் பேட்டிங்குக்கு தகுந்த மாதிரி ஸ்கோர் அமையாமல் போவது உண்டு.

விமர்சகர்கள் எங்கள் மன நிலையை மாற்ற முயற்சிக்கிறார்கள். ஆனால், அது நடக்காது. ஒரு தோல்வியால் எங்களது தன்னம்பிக்கை சிதைந்துவிடாது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News