செய்திகள்
ஷாய் ஹோப் சதம் வீணானது - முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இலங்கை
கொழும்புவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி வெற்றி பெற்றது.
கொழும்பு:
வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதில், கொழும்புவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் இன்று மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 115 ரன்னில் அவுட்டானார். சேஸ் 41 ரன்னும், பிராவோ 39 ரன்னும், கீமோ பால் 32 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கை அணி சார்பில் உதானா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பெர்னாண்டோ, கருணரத்னே சிறப்பான அடித்தளம் அமைத்தனர். இருவரும அரை சதமடித்து அசத்தினர்.
பெர்னாண்டோ 50 ரன்னிலும், கருணரத்னே 52 ரன்னிலும், குசால் பெராரா 42 ரன்னிலும், திசாரா பெராரா 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
கடைசி கட்டத்தில் போராடிய ஹசரங்கா 42 ரன் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில், இலங்கை அணி 49.1 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 290 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஹசரங்கா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டும், கீமோ பால், வால்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.