செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டத் தரகர் சஞ்சீவ் குமார் சாவ்லா இந்தியா கொண்டு வரப்பட்டார்
கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கிய தரகர் சஞ்சீவ் குமார் சாவ்லா, லண்டனில் இருந்து பலத்த பாதுகாப்புடன் இன்று இந்தியா கொண்டு வரப்பட்டார்.
புதுடெல்லி:
2000-ம் ஆண்டில் ஹன்சி குரோஞ்ச் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்தது. இதில் சூதாட்டத் தரகராக செயல்பட்டதாக டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் சஞ்சீவ் குமார் சாவ்லா மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, சஞ்சீவ் குமார் சாவ்லா லண்டன் தப்பிச்சென்று அந்நாட்டு குடிமகன் ஆனார். அவரை நாடு கடத்தும்படி இங்கிலாந்து அரசுக்கு 2016-ம் ஆண்டில் இந்திய அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுதொடர்பான வழக்கை கடந்த மாதம் 23-ம் தேதி விசாரித்த இங்கிலாந்து நீதிமன்றம், சாவ்லாவை 28 நாட்களுக்குள் இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், இங்கிலாந்தால் அவர் நாடு கடத்தப்பட்டார்.
இந்நிலையில், நாடு கடத்தப்பட்ட சஞ்சீவ் குமார் சாவ்லாவை லண்டனில் இருந்து டெல்லிக்கு பலத்த பாதுகாப்புடன் போலீசார் இன்று காலை அழைத்து வந்து டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அவர் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு இங்கிலாந்து நீதிமன்றங்களுக்கு இந்திய அரசு அளித்த உத்தரவாதப்படி திகார் சிறையில் காவலில் வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.