செய்திகள்
ஆஸ்திரேலியா பெண்கள் அணி வீராங்கனைகள்

பெண்கள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா- இந்தியாவுடன் பலப்பரீட்சை

Published On 2020-02-09 19:59 IST   |   Update On 2020-02-09 19:59:00 IST
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி லீக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதன் மூலம் முத்தரப்பு பெண்கள் கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பெண்கள் அணிகளுக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும்.

அதன்படி முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்தியா நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற கடைசி லீக்கில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 132 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீராங்கனை பெத் மூனே 50 ரன்கள் சேர்த்தார். மற்ற வீராங்கனைகள் பெரிய அளவில் ரன்கள் அடிக்கவில்லை.

பின்னர் 133 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. சீரான இடைவெளியில் அந்த அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா வெற்றியால் மூன்று அணிகளும் தலா இரண்டு வெற்றிகள் பெற்றிருந்தன. ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா முதல் இடமும், இந்தியா 2-வது இடத்தையும் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

12-ந்தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை நடத்துகின்றன.

Similar News