செய்திகள்
பிரித்வி ஷா

பிரித்வி ஷாவை சோதிக்கும் காயம்: மீண்டும் அணியில் இருந்து விலகல்

Published On 2020-01-08 13:31 IST   |   Update On 2020-01-08 13:31:00 IST
நியூசிலாந்து தொடரை எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில், ரஞ்சி போட்டியின்போது காயம் ஏற்பட்டதால் பிரித்வி ஷாவின் கனவு தகர்ந்துள்ளது.
ரஞ்சி கிரிக்கெட்டில் கர்நாடகாவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணிக்காக களம் இறங்கிய இளம் வீரர் பிரித்வி ஷா பீல்டிங்கின் போது இடது தோள்பட்டையில் காயமடைந்தார். தற்போது அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மற்றும் பயிற்சி முறைகளை மேற்கொண்டு வருகிறார்.

நாளை மறுதினம் நியூசிலாந்துக்கு புறப்படும் இந்திய ‘ஏ’ அணியில் பிரித்வி ஷாவும் இடம் பெற்றிருந்தார். தற்போது ஏற்பட்டுள்ள காயத்தால் அங்கு 17, 19-ந்தேதிகளில் நடக்கும் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் இருந்து அவர் விலகியுள்ளார். நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிராக 3 ஒரு நாள் மற்றும் இரண்டு 4 நாள் போட்டிகளில் அவர் ஆடுவாரா? என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அறிமுக தொடரில் சிறப்பாக விளையாடியதால் கடந்த 2018 ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். பயிற்சி ஆட்டத்தின்போது காயம் ஏற்பட்டதால் ஆஸ்திரேலிய மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

அதன்பின் அவர் பயன்படுத்திய இருமல் மருந்தில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து இருந்ததாக தடைவிதிக்கப்பட்டது. தடைக்காமல் முடிந்து மும்பை அணியில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடினார். இதன் காரணமாக நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஏ அணியில் இடம் பிடித்தார்.

நியூசிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த அவருக்கு காயம் மிண்டும் தொல்லை கொடுத்துள்ளது.

Similar News