செய்திகள்
கங்குலி

ஒவ்வொரு தொடரிலும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்: கங்குலி விருப்பம்

Published On 2019-12-04 05:34 GMT   |   Update On 2019-12-04 05:34 GMT
ஒவ்வொரு தொடரிலும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் நடத்த வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி விருப்பம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியது. கொல்கத்தாவில் வங்காளதேசத்துக்கு எதிராக நடந்த இந்த பிங்க் நிற பந்து டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. சில ஆண்டுகளாக இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாட தயக்கம் காட்டி வந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியின் முயற்சியால் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் எனக்கு மிகுந்த நம்பிக்கையும், உற்சாகமும் அளிக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை முன்னெடுத்துச் செல்ல இந்த போட்டி அவசியமாகும். ஒவ்வொரு டெஸ்டும் பகல்-இரவு போட்டியாக இருக்க வேண்டியதில்லை. ஒரு தொடரில் குறைந்தது ஒரு டெஸ்ட் பகல்-இரவு மோதலாக இருக்க வேண்டும். பகல்-இரவு டெஸ்டை நடத்தியதில் எனது அனுபவங்களை கிரிக்கெட் வாரியத்தின் மற்ற நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொள்வேன். மற்ற இடங்களிலும் பிங்க் பந்து டெஸ்டை நடத்த முயற்சிப்போம். இப்போது ஒவ்வொரு வீரரும் இத்தகைய போட்டியில் விளையாட தயாராக இருக்கிறார்கள். வெறும் 5 ஆயிரம் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவதை யாரும் விரும்பவில்லை’ என்றார்.

அதே சமயம் இந்திய கேப்டன் விராட் கோலி, பகல்-இரவு டெஸ்ட் போட்டி என்பது எப்போதாவது மட்டுமே நடக்க வேண்டுமே தவிர வழக்கமாகி விடக்கூடாது என்று கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது. 
Tags:    

Similar News