செய்திகள்
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்

இந்தூர் டெஸ்ட்: 203 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து வங்காளதேசம் அணி திணறல்

Published On 2019-11-16 09:37 GMT   |   Update On 2019-11-16 09:37 GMT
இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் அணி 203 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் இழந்து திணறி வருகிறது.
இந்தூர்:

இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் குவித்து வலுவான முன்னிலையில் இருந்தது. இரட்டைச் சதம் அடித்த மயங்க் அகர்வால் 243 ரன்கள் குவித்தார். ஜடேஜா 60 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இன்று காலை 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்னரே, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை, ஏற்கனவே இருந்த 493 ரன்களுடன் டிக்ளேர் செய்வதாக கேப்டன் விராட் கோலி அறிவித்தார்.

இதையடுத்து இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய வங்காள தேச அணி தொடக்கம் முதலே முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நிலைத்து நின்று ஆடவேண்டிய தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். முஷ்பிகுர் ரஹீம் மட்டும் இந்திய அணியின் பந்து வீச்சை சற்று சமாளித்து விளையாடினார். அரைசதம் கடந்த அவர் தற்போது 57 ரன்களுடன் களத்தில் உள்ளார். 

தேநீர் இடைவேளைக்குப் பிறகு வங்காள தேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்து தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது சமி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும், இசாந்த் சர்மா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 
Tags:    

Similar News