செய்திகள்
இளம் சிவப்பு பந்து

கொல்கத்தாவில் நடைபெறும் பகல்-இரவு டெஸ்டுக்கு 72 இளம் சிவப்பு பந்துகள்

Published On 2019-10-31 07:27 GMT   |   Update On 2019-10-31 07:27 GMT
இந்தியா - வங்காளதேச அணிகள் மோதும் பகல் இரவு டெஸ்ட் போட்டிக்கு 72 இளம் சிவப்பு பந்துகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
புதுடெல்லி:

வங்காளதேச கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக நேற்று இரவு இந்தியா வந்தது.

இந்தியா - வங்காளதேச அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் டெல்லியில் வருகிற 3-ந் தேதி நடக்கிறது. காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் இந்த ஆட்டம் நடைபெறுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. வேறு இடத்துக்கு போட்டி மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

10-ந் தேதியுடன் 20 ஓவர் தொடர் முடிகிறது. முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது.

கொல்கத்தா டெஸ்ட் பகல்-இரவாக நடக்கிறது. முதல் முறையாக இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாடுகிறது.

டெஸ்ட் போட்டியில் வழக்கமாக சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்படும். பகல்-இரவு டெஸ்டில் இளம் சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்படும். இந்தியாவில் முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் நடைபெறுவதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அனைத்து ஏற்பாடுகளையும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்டில் பயன்படுத்துவதற்காக 72 இளம் சிவப்பு பந்துகளை தயாரித்து அனுப்புமாறு கிரிக்கெட் வாரியம் தயாரிப்பு நிறுவனமான எஸ்.ஜி. அமைப்புடன் கேட்டுக்கொண்டுள்ளது.

எஸ்.ஜி. நிறுவனம் பகல்- இரவு டெஸ்டுக்காக இளம் சிவப்பு நிற பந்துகளை விசே‌ஷமாக தயாரிக்கிறது.
Tags:    

Similar News