செய்திகள்
எம்எஸ் டோனி

ஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்? கிரிக்கெட் வாரியம் திட்டம்

Published On 2019-07-15 05:41 GMT   |   Update On 2019-07-15 05:41 GMT
டோனி ஓய்வு பெறாவிட்டால் அவரை அணியில் சேர்க்காமல் புறக்கணிப்பது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி.

இந்தியாவுக்கு 2 உலகக் கோப்பையை (2007-20 ஓவர் கோப்பை, 2011 ஒருநாள் போட்டி) வென்று பெருமை சேர்த்த அவர் தற்போது ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் விளையாடி வருகிறார்.

38 வயதான டோனி உலக கோப்பை போட்டியோடு ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர் பார்க்கப்பட்டது. உலகக் கோப்பை போட்டியில் அவரது ஆட்டம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் டோனி ஓய்வு குறித்து தன்னிடம் எதுவும் பேசவில்லை என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்து இருந்தார். இதன் மூலம் அவர் தனது ஓய்வு முடிவை தள்ளி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை வரை விளையாட டோனி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே டோனி ஓய்வு பெறாவிட்டால் அவரை அணியில் சேர்க்காமல் புறக்கணிப்பது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



அதாவது ஓய்வு முடிவை அறிவிக்காவிட்டால் இந்திய அணியில் இருந்து டோனியை நீக்க முடிவு செய்து இருப்பதாக பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அவரை ஓரங்கட்டுவது தான் சரியாக இருக்கும் கருதப்படுகிறது. 6-வது மற்றும் 7-வது வரிசையில் விளையாடும் அவர் பந்துகளை அடிப்பதில் திணறி வருவதால் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை மேற்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தேர்வு குழு தலைவர் எம்.கே.பிரசாத் இது தொடர்பாக டோனியிடம் பேசுவார். அவரிடம் தானாக ஓய்வு பெறுமாறு வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.

இந்த நெருக்கடி காரணமாக டோனி தனது ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News