செய்திகள்

டி20 கிரிக்கெட்: இம்ரான் தாஹிரின் அசத்தல் பந்து வீச்சால் சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

Published On 2019-03-20 10:06 GMT   |   Update On 2019-03-20 10:28 GMT
இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இம்ரான் தாஹிரின் சிறப்பாக பந்து வீச்சால், சூப்பர் ஓவரில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. #SAvSL
தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் டிக்வெல்லா (0), பெர்னாண்டோ (16), குசால் மெண்டிஸ் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

கமிந்து மெண்டிஸ் 41 ரன்களும், உடானா 6 பந்தில் 12 ரன்களும் அடிக்க இலங்கை 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. டி காக் (13), டு பிளிசிஸ் (21), வான் டெர் டஸ்சன் (34), டேவிட் மில்லர் (41) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் தென்ஆப்பிரிக்கா எளிதாக வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இலங்கை அணியின் துல்லியமான சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்ஆப்பிரிக்கா இறுதிக் கட்டத்தில் திணறியது. இதனால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இரு அணிகளின் ஸ்கோரும் சமமாக இருந்ததால், சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. மில்லர் மற்றும் டஸ்சன் ஆகியோர் பேட்டிங் செய்ய மலிங்கா பந்து வீசினார். மில்லர் 3-வது பந்தில் சிக்சரும், 5-வது பந்தில் பவுண்டரியும் விளாசினார். இதனால் இலங்கை அணிக்கு ஒரு ஓவரில் 15 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தென்ஆப்பிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் பந்து வீச இலங்கையின் அவிஷ்கா பெர்னாண்டோ, திசாரா பெரேரா ஆகியோர் களம் இறங்கினர்.

இம்ரான் தாஹிரின் துல்லியமாக பந்து வீசினார். இதனால் இலங்கை வீரர்களால் பவுண்டரியோ, சிக்சரோ அடிக்க முடியவில்லை. ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா அணி சூப்பர் ஓவரில் அசத்தல் வெற்றி பெற்றது.
Tags:    

Similar News