செய்திகள்

U 19 உலகக் கோப்பை: கில்லு சதத்தால் பாகிஸ்தானுக்கு 273 ரன்கள் வெற்றி இலக்கு

Published On 2018-01-30 01:47 GMT   |   Update On 2018-01-30 03:18 GMT
U 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதியில், பாகிஸ்தானுக்கு 273 ரன்களை இலக்காக இந்தியா நிர்ணயம் செய்துள்ளது. #U19 #Pakistan #India
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேயா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தானை வென்ற ஆஸ்திரேலியா அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், 2-வது அரையிறுதி போட்டி நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் பிரித்வி ஷாவும், மஞ்ஜோத் கல்ராவும் களமிறங்கினர். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. அணியின் எண்ணிக்கை 86 ரன்னாக இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. பிரித்வி ஷா 42 பந்துகளில் 1 சிக்சர், 3 பவுண்டரி அடித்து 41 ரன்களில் ரன் அவுட்டானார். 

அவரை தொடர்ந்து சுப்மான் கில் இறங்கினார். மறுமுனையில் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கல்ரா 47 ரன்களில் அவுட்டானார். அவர் 59 பந்துகளில் 7 பவுண்டரி அடித்து 47 ரன் எடுத்தார். அப்போது 94 ரன்கள் எடுத்திருந்தது.

அவருக்கு பிறகு களமிறங்கிய விக்கெட் கீப்பர் ஹர்விக் தேசாய் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 54 ரன்கள் எடுத்த நிலையில் தேசாய் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்திருந்தது. மேலும் 18 ரன்கள் சேர்ப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கில் நிலைத்து நின்று விளையாடி சதமடித்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது. கில் 102 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி சார்பில் அர்ஷத் இக்பால் 3 விக்கெட்டுகளும், முகமது மூசா 4 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து, 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் விளையாடியது.  
Tags:    

Similar News