செய்திகள்

இரண்டரை மணி நேரம் நேர்காணல்: ஷேவாக் தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்படுவாரா?

Published On 2017-07-11 08:17 GMT   |   Update On 2017-07-11 08:18 GMT
இந்திய அணிக்கான புதிய பயிற்சியாளர் அறிவிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், ஷேவாக்குக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை:

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்வதற்கான நேர்காணல் மும்பையில் நேற்று நடந்தது.

இந்த நேர்காணலில் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பயிற்சியாளர் யார்? என்பது குறித்த அறிவிப்பு தள்ளி வைக்கப்பட்டது.

புதிய பயிற்சியாளரை இறுதி செய்ய தங்களுக்கு சில நாட்கள் கால அவகாசம் தேவைப்படுவதாக முன்னாள் கேப்டனும், பயிற்சியாளரை தேர்வு செய்யும் ஆலோசனை குழுவில் உள்ளவருமான கங்குலி தெரிவித்தார்.

புதிய பயிற்சியாளர் குறித்த அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டதால் ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனால் புதிய பயிற்சியாளராக வீரேந்தர் ஷேவாக்குக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷேவாக்கிடம் நேற்று 2½ மணி நேரம் நேர்காணல் நடத்தப்பட்டது.

அதே நேரத்தில் ரவிசாஸ்திரி கேப்டன் விராட் கோலியின் ஆதரவை பெற்றவர் என்பதால் பயிற்சியாளரை இறுதி செய்யும் விவகாரத்தில் தொடர்ந்து குழப்பமான சூழ்நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News