செய்திகள்

நியூசி. - பாக். டெஸ்ட்: முதல் நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி மழையினால் பாதிப்பு

Published On 2016-11-25 16:42 IST   |   Update On 2016-11-25 16:42:00 IST
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி மழையினால் பாதிக்கப்பட்டது.
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் ராவல், லாதம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை மொகமது ஆமீர் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் லாதம் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.

அடுத்து கேப்டன் வில்லியம்சன் களம் இறங்கினார். இவர் 13 ரன்கள் எடுத்த நிலையில் சோஹைல் கான் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

நியூசிலாந்து அணி 39 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ராவல் உடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். நியூசிலாந்து அணி 21 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது.



இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர். ஆகவே 21 ஓவர்களுடன் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ராவல் 35 ரன்னுடனும், டெய்லர் 29 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Similar News