இந்தியா

பிச்சை எடுக்கும் பெற்றோர்கள்

இறந்த மகனின் உடலை எடுத்து செல்ல ரூ.50,000 லஞ்சம் கேட்கவில்லை- மாவட்ட நிர்வாகம் விளக்கம்

Published On 2022-06-09 07:25 GMT   |   Update On 2022-06-09 07:25 GMT
  • மகனின் இறந்த உடலை வாங்க பெற்றோர் பிச்சை எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது.
  • காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இறந்தவரின் உடல், 72 மணி நேரத்திற்கு தரப்படாது என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

பாட்னா:

பீகார் மாநிலம் சமஸ்டிபூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் தாக்கூர். இவரது மகன் கடந்த சில நாட்களுக்கு காணாமல் போனார். பின் அவர் இறந்துவிட்டதாகவும், அவரது உடல் அப்பகுதியில் உள்ள சதார் அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும் பெற்றோருக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து மகேஷ் தாக்கூர் இறந்த மகனின் உடலை வாங்க தனது மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்றார்.

ஆனால், அங்கிருந்த ஊழியர்கள் உடலை தர வேண்டுமானால் 50,000 ரூபாய் லஞ்சம் வேண்டும் என கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. வறுமையில் வாடும் பெற்றோர், ரூ.50,000 லஞ்சம் கொடுக்க பணமில்லாமல் தெரு தெருவாக பிச்சை எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மருத்துவமனையில் யாரும் லஞ்சம் கேட்கவில்லை என மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி வினய் குமார் ராய் கூறுகையில்,

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்றது. இறந்த நபரின் உடல் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 72 மணி நேரம் வரை இறந்தவரின் உடல் தரப்படாது. பெற்றோர் மருத்துவ நிர்வாகத்திடம் கேட்டபோது, அங்கிருந்த அதிகாரிகள் நீங்கள் ரூ.50,000 லஞ்சம் கொடுத்தாலும் உடலை எடுத்து செல்ல முடியாது என கூறியுள்ளனர். இந்த வார்த்தை தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. இதனால் மருத்துவமனை மீது தவறு இல்லை. 

இவ்வாறு மாவட்ட நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News