உலகம்
null

டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காதது ஏன்?.. வெற்றியாளர் பற்றி நோபல் கமிட்டி சொன்ன விஷயம்!

Published On 2025-10-10 16:09 IST   |   Update On 2025-10-10 23:36:00 IST
  • நியூ யார்க்கில் நடந்த 80வது ஐநா பொதுச்சபை கூட்டத்திலும் அவர் இதையே பேசினார்.
  • டிரம்ப்-புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாதது பேசுபொருளாகி உள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இவர் தற்போது வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார். 2011 முதல் 2014 வரை வெனிசுலா தேசிய சட்டமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக பணியாற்றினார்.

நோபல் கமிட்டி வெளியிட்டுள்ள பதிவில், நீடித்த அமைதிக்கு ஜனநாயகம் ஒரு இன்றியமையாதது. இருப்பினும், ஜனநாயகம் பின்வாங்கும் உலகில் நாம் வாழ்கிறோம். சர்வாதிகார ஆட்சிகள் விதிமுறைகளை சவால் செய்து வன்முறையை நாடுகின்றன.

வெனிசுலா ஆட்சியின் அதிகாரத்தின் மீதான இறுக்கமான பிடிப்பும் மக்கள் மீதான அதன் அடக்குமுறையும் புதிது அல்ல. உலகளவில் அதே போக்குகளை நாம் காண்கிறோம். அதிகாரத்தில் உள்ளவர்களால் சட்டத்தின் ஆட்சி துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.

சுதந்திரமான ஊடகங்கள் மௌனமாக்கப்படுகின்றன. விமர்சகர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள், மற்றும் சமூகங்கள் சர்வாதிகார ஆட்சி மற்றும் இராணுவமயமாக்கலை நோக்கித் தள்ளப்படுகின்றன.

இத்தகு சூழலில் வெனிசுலா மக்களின் சுதந்திரத்திற்காக பல ஆண்டுகளாக உழைத்த மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டு நோபல்அமைதிப் பரிசை வழங்குவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.  

இந்தியா-பாகிஸ்தான் உள்ளிட்ட 6 போர்களை நிறுத்தினேன் என்றும் தனக்கே நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறி வந்தார். அண்மையில் நியூ யார்க்கில் நடந்த 80வது ஐநா பொதுச்சபை கூட்டத்திலும் அவர் இதையே பேசினார்.

மேலும் நேற்று  கருத்து தெரிவித்த பேசிய டிராம்ப், முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியிருக்கக்கூடாது என்றும் அவர் அதற்கு தகுதியற்றவர் என்றும் பேசியிருந்தார். இந்த சூழலில் டிரம்ப்-புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாதது பேசுபொருளாகி உள்ளது. 

குறிப்பாக வெற்றியாளரை அறிவிக்கும் நோபல் கமிட்டி பதிவில் குறிப்பிடப்பட்ட சர்வாதிகார போக்கு டிரம்ப் அரசுக்கு பல வகையில் பொருந்துவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஜனவரியில் அதிபராக பதவியேற்றத்தில் இருந்து டிரம்ப் அமெரிக்காவில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்கள் மீதான கட்டுப்பாடுகள், கட்டாய நாடு கடத்தல்கள், வர்த்தக தடைகள் மூலம் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் பொருளாதாரத்தின் மீது ஆதிக்கம், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் மாகாண போலீசாருக்கு பதிலாக மத்திய படைகளை நிறுவியது, தனது கட்டுப்பாடுகளுக்கு இணங்காத ஹார்வார்டு உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுக்கு நிதி வழங்கலை நிறுத்தியது, தன்னை விமர்சிக்கும் ஊடகங்களுக்கு நஷ்டஈடு கேட்டும் அரசு ரீதியாக கட்டுப்பாடுகள் மூலம் அழுத்தம் கொடுப்பது போன்ற டிரம்ப்பின் பல்வேறு நடவடிக்கைகள் சர்வாதிகார போக்கை கொண்டுள்ளதாக கருதப்படுகிறது. 

Tags:    

Similar News