வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை திருடி சென்ற மாவோயிஸ்டு பயங்கரவாதிகள்
- கடந்த 2 நாட்களாக ஒரு ஆணும், பெண்ணும் துப்பாக்கியுடன் கிராமத்திற்குள் வந்தனர்.
- கிராமத்திற்குள் உணவு பொருள்களை கொள்ளை அடித்து சென்றது மாவோயிஸ்டு பயங்கரவாதிகளாக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள மலை கிராமங்களில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் அடிக்கடி புகுந்து தாக்குதலில் ஈடுபடுவது வழக்கம்.
இதையடுத்து வயநாடு, கல்பேட்டா பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் அதிரடிபடை போலீசார் முகாமிட்டு பயங்கரவாதிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயநாடு மற்றும் அதை சுற்றியுள்ள மலை கிராமங்களில் உள்ள வீடுகளில் உணவு பொருள்கள் கொள்ளை அடித்து செல்லப்பட்டதாக பொதுமக்கள் போலீசில் புகார் அளித்தனர்.
வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருள்களை கொள்ளை அடித்து செல்வது மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து வயநாடு, கல்பேட்டா மற்றும் அதை சுற்றியுள்ள மலை கிராமங்களுக்கு அதிரடி படை போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் சந்தேகப்படும் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கிராம மக்களிடமும் இதுகுறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது கடந்த 2 நாட்களாக ஒரு ஆணும், பெண்ணும் துப்பாக்கியுடன் கிராமத்திற்குள் வந்தனர். அவர்கள் உணவு பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளை நோட்டமிட்டப்படி சென்றனர்.
ஜோடியாக ஊருக்குள் சுற்றி வந்தனர் எனவும் மலைகிராம பெண்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அவர்கள் கூறிய அடையாளங்களை கொண்டு கிராமத்திற்குள் உணவு பொருள்களை கொள்ளை அடித்து சென்றது மாவோயிஸ்டு பயங்கரவாதிகளாக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.