திருப்பதியில் அதிகபட்சமாக ஒரே நாளில் ரூ.5.88 கோடி உண்டியல் வசூல்
- கொரோனா தொற்றுக்கு பிறகு இந்த ஆண்டில் திருப்பதியில் நேற்று அதிகபட்சமாக ரூ 5.88 கோடி உண்டியல் வசூலானது.
- 70,496 பேர் தரிசனம் செய்தனர். 25,500 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்றுக்கு பிறகு இந்த ஆண்டு தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தினந்தோறும் சராசரியாக 65 ஆயிரம் முதல் 80 ஆயிரமாக உள்ளது. தினமும் ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் 25 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனம் மற்றும் இலவச டைம் ஸ்லாட், சேவா டிக்கெட்டுகள் பெற்றும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனால் மாதம் தோறும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.120 முதல் 130 கோடி வரை உண்டியலில் காணிக்கையாக கிடைக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தேவஸ்தானத்திற்கு அதிக அளவில் வருவாய் கிடைத்து வருகிறது.
கொரோனா தொற்றுக்கு பிறகு இந்த ஆண்டில் திருப்பதியில் நேற்று அதிகபட்சமாக ரூ 5.88 கோடி உண்டியல் வசூலானது. 70,496 பேர் தரிசனம் செய்தனர். 25,500 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியையொட்டி 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். இதனால் உண்டியல் வருவாய் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.