கேரளாவில் இன்று தனியார் பஸ்கள் வேலைநிறுத்தம்: சீட் பெல்ட் கட்டாயத்தை கைவிட வலியுறுத்தல்
- கேரள மாநிலத்தை பொறுத்தவரை தனியார் பஸ்கள் அதிகமாக இயக்கப்படுகின்றன.
- தனியார் பஸ்கள் எதுவும் ஓடாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதே போல் மாநிலம் முழுவதும் தனியார் பஸ்களும் அதிக அளவில் ஓடுகின்றன.
இந்நிலையில் கனரக வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்குவதற்கு கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சீட் பெல்ட் வருகிற நவம்பர் 1-ந்தேதி முதல் கட்டாயம் என்ற உத்தரவு சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது. கேரள போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்து கனரக வாகனங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கண்காணிப்பு கேமரா மற்றும் சீட் பெல்ட் உள்ளிட்டவைகளை அமைப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தனியார் பஸ் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கேரள மாநிலம் முழுவதும் தனியார் பஸ்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.
இதனால் மாநிலம் முழுவதும் தனியார் பஸ்கள் இன்று ஓடவில்லை. கேரள மாநிலத்தை பொறுத்தவரை தனியார் பஸ்கள் அதிகமாக இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இன்று தனியார் பஸ்கள் எதுவும் ஓடாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
அவர்கள் அரசு பஸ்கள் மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்தனர். இதனால் அரசு பஸ்களில் கடும் கூட்டமாக இருந்தது.
கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சீட் பெல்ட் அமைப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்பது மட்டுமின்றி, மாணவர்களுக்கான டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையும் வலியுறுத்தியே தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.