இந்தியா

பரிசாக வந்த ஸ்பீக்கர் வெடித்தது- புதுமாப்பிள்ளை கொலையில் மணப்பெண்ணின் முன்னாள் காதலன் கைது

Published On 2023-04-05 07:05 GMT   |   Update On 2023-04-05 07:05 GMT
  • ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டத்தை ஆய்வு செய்த போது அதில் வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்டு இருந்தது தெரியவந்தது.
  • திருமணத்தின் போது யாரெல்லாம் பரிசு பொருட்கள் வழங்கினார்கள் என்று போலீசார் ஆய்வு செய்தனர்.

ராய்ப்பூர்:

சத்தீஷ்கர் மாநிலம் கபீர்தனம் மாவட்டம் ரெங்காகர் பகுதியை சேர்ந்தவர் ஹேமேந்திரா மெராவி (வயது 22). இவருக்கு கடந்த 1-ந்தேதி திருமணம் நடந்தது.

திருமணத்தில் பல்வேறு பரிசு பொருட்கள் குவிந்தன. அதில் ஒன்று ஹோம் தியேட்டர் (ஸ்பீக்கர்) மியூசிக் சிஸ்டம். இதை புது மாப்பிள்ளை ஹேமேந்திரா மெராவியும் அவரது சகோதரர் ராஜ்குமாரும் இயக்க முயன்றார்.

இதற்காக ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டத்தை மின் இணைப்போடு இணைத்த போது அது வெடித்து சிதறியது. இதில் மணமகன், அவரது சகோதரர், 1½ வயது குழந்தை உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் புதுமாப்பிள்ளை ஹேமேந்திரா, அவரது சகோதரர் ராஜ்குமார் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டத்தை ஆய்வு செய்த போது அதில் வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து திருமணத்தின் போது யாரெல்லாம் பரிசு பொருட்கள் வழங்கினார்கள் என்று ஆய்வு செய்தனர். மணமகளின் முன்னாள் காதலன் சர்ஜூ மார்கம் ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டத்தை பரிசாக வழங்கியது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இது தொடர்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மனிஷா தாகூர் கூறியதாவது:-

விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட சர்ஜூ தனது முன்னாள் காதலியை திருமணம் செய்து கொண்ட ஹேமேந்திரா மெராவி மீது கோபமாக இருந்ததை ஒப்புக்கொண்டார். எனவே அவர் வெடிப்பொருட்கள் நிரப்பிய ஹோம் தியேட்டரை பரிசாக கொடுத்து கொலை சம்பவத்தை நிகழ்த்தி இருக்கிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News