தெலுங்கானாவில் சூனியம் வைத்ததாக கணவன், மனைவி அடித்து கொலை
- தம்பதியருக்கு பக்கத்து வீட்டுக்காரரான கோவை அப்பா ராவ் என்பவருடன் நிலத் தகராறு இருந்து வந்தது.
- தம்பதியினர் சூனியம் வைப்பதாக நினைத்து அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் சிந்தூர் மண்டலம் கல்லேறு ஊராட்சி ஸ்டாபோர்ட் பேட்டையை சேர்ந்தவர்கள் மிதியம் லக்ஷ்மய்யா (வயது 54), இவரது மனைவி மிதியம் சிங்கம்மா (52).தம்பதிகள் வசிக்கும் கிராமம் ஆந்திரா-ஒடிசா எல்லைக்கு அருகில் உள்ளது.
அவர்களது வீடும் கிராமத்தில் உள்ள மற்ற வீடுகளில் இருந்து வெகு தொலைவில் தனியாக உள்ளது.
தம்பதியருக்கு பக்கத்து வீட்டுக்காரரான கோவை அப்பா ராவ் என்பவருடன் நிலத் தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் முதியோர் தம்பதி இருவரும் சூனியம் செய்வதாக கிராம மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு தம்பதி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் உருட்டு கட்டைகளுடன் சென்று அவர்களுடைய வீட்டு கதவை தட்டினர்.
அவர்கள் கதவை திறந்ததும் உள்ளே சென்ற கும்பல் மிதியம் லக்ஷ்மய்யா மற்றும் அவரது மனைவியை தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த தம்பதி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஆனாலும் கும்பல் தொடர்ந்து தாக்கியதில் அவர்கள் இருவரது உடலும் சிதைந்தன. பின்னர் கும்பல் தப்பி சென்று விட்டனர்.
நேற்று மாலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது கணவன், மனைவி கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தம்பதியினர் சூனியம் வைப்பதாக நினைத்து அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.